செய்திகள்

தஞ்சையில் வழிப்பறி- கொள்ளையர்கள் 6 பேர் அதிரடி கைது

Published On 2018-09-02 14:00 GMT   |   Update On 2018-09-02 14:00 GMT
தஞ்சையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகரில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலும் தஞ்சை பழைய பஸ் நிலையம், தெற்கு வீதி, ரெயில் நிலையம், எம்.கே.மூப்பனார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் அந்த வழியாக வரும் பொதுமக்களை சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மிரட்டி, தாக்கி அவர்களிடம் இருந்த பணம், செல்போனை பறித்து சென்று வந்தனர்.

இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனே செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜகோ பால், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன் மற்றும் தனிப்படையை சேர்ந்த போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது வழிப்பறி போன்ற அட்டூழிய செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் உலா வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.

இதில் தஞ்சை மேலவீதியை சேர்ந்த எலி என்ற முருகானந்தம், மேல அலங்கத்தை சேர்ந்த ராமு என்ற லெப்ட்ராமு, கோடி என்ற குமரேசன், கோபி, வடக்கு வாசலை சேர்ந்த சீனிவாசன், அதே பகுதி ருக்மணி அம்மன் மடம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் தான் பொதுமக்களை மிரட்டி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News