செய்திகள்

அந்தியூரில் விடுதியில் தங்கிய ஓட்டல் தொழிலாளி திடீர் தற்கொலை

Published On 2018-09-02 12:29 GMT   |   Update On 2018-09-02 12:29 GMT
அந்தியூரில் இன்று காலை விடுதியில் தங்கிய ஓட்டல் தொழிலாளி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூர்:

அந்தியூர் பஸ் நிலையம் அருகே பவானி செல்லும் ரோட்டில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் ஊட்டியைச் சேர்ந்த சேகர் (வயது21) என்ற வாலிபர் சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.

இந்தி நிலையில் சேகர் தனது ஊருக்கு போக வேண்டும் ரூ.10 ஆயிரம் பணம் தாருங்கள் என கேட்டாராம். அதற்கு உரிமையாளர் திடீரென கேட்டால் எப்படி...நாளை தருகிறேன் என்று கூறினாராம்.

ஓட்டல் எதிரே தொழிலாளிகள் தங்கும் விடுதி உள்ளது. வழக்கம் போல் சேகர் விடுதிக்கு சென்று விட்டார்.

இதற்கிடையே இன்று காலை அவர் தங்கி இருந்த மாடி அறையில் இருந்து குழாயில் தண்ணீர் கீழே கொட்டியபடி இருந்தது. அந்த வழியாக நடந்து சென்றவர்கள் இதை கண்டு மேலே இருப்பவர்களிடம் தெரிவித்தனர்.

உடனடியாக அந்த அறையை ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது உள்ளே தொழிலாளி சேகர் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இது குறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு அறையில் தூக்குபோட்டு பிணமாக தொங்கிய சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலாளி சேகர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ன காரணம் என உடனடியாக தெரியவில்லை.

இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

இன்று காலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்தியூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு கூட்டமும் கூடியது. போலீசார் அவர்களை கலைந்து போகும்படி கூறினர். 

Tags:    

Similar News