செய்திகள்
தக்கலை பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவிகளிடம் போதையில் ரகளை செய்த வாலிபர்
கல்லூரி மாணவிகளிடம் போதையில் ரகளை செய்த வாலிபரை பயணிகள் மற்றும் வியாபாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தக்கலை:
தக்கலை பஸ் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருப்பார்கள். நேற்று மாலையில் பள்ளி, கல்லூரி முடிந்து பஸ் நிலையம் வந்த மாணவிகள், வீடுகளுக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்த போது வாலிபர் ஒருவர் அங்கு வந்தார்.
போதையில் இருந்த அவர் மாணவிகளை பார்த்து ஆபாச சேட்டைகள் செய்தபடி ரகளையில் ஈடுபட்டார். இதை கண்ட சக பயணிகள் மற்றும், வியாபாரிகள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இது பற்றி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் கூறும்போது, பஸ் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் போலீசார் சீருடையில் ரோந்து சுற்றி வரவேண்டும். அப்போதுதான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியும், அதற்கு போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.