செய்திகள்
யானைகளுடன் செல்பி எடுத்தால் நடவடிக்கை- மாவட்ட வனத்துறை அதிகாரி எச்சரிக்கை
வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளுடன் செல்பி எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வனத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேன்கனிக்கோட்டை:
கசிவுநீர் குட்டையில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்டு யானைகளை பாதுகாப்பு கருதி செல்பி எடுக்க வேண்டாம் என்றும் அதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி தீபக்பில்கி தெரிவித்தார். தேன்கனிக்கோட்டையில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கேரட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஐந்து யானைகள் முகாமிட்டிருந்தது. யானைகள் வனப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டையில் விளையாடி கொண்டிருப்பதை அதிகாலை கேரட்டி வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க சென்றவர்கள் பார்த்தனர்.
இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் யானைகள் தங்கி உள்ள பகுதிக்கு வந்து வன விலங்குகளுக்கு இடையூறு செய்ததோடு மட்டுமில்லாமல் அதனுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அங்கு வந்து பொது மக்களை கலைந்து போக வேண்டியும் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டனர்.
இதை பொருட்படுத்தாமல் செல்பி எடுப்பதில் பொதுமக்கள் தீவிரம் காட்டியதால் வனத்துறையினர் தங்களின் உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி செல்பி எடுப்போரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட வனத்துறை அதிகாரி தீபக் பில்கி உத்தரவிட்டார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், வனவிலங்குகளுடம் செல்பி எடுப்பது மிகவும் ஆபத்தான செயல் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.