கடலூரில் இன்று அதிகாலை தடுப்பு சுவரில் லாரி மோதியது-டிரைவர் காயம்
கடலூர்:
சென்னையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). லாரி டிரைவர். இவர் நேற்று மாலை பொருட்களை ஏற்றுவதற்காக காரைக்காலில் இருந்து புதுவை நோக்கி லாரியில் புறப்பட்டார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிதம்பரம் சாலையில் இன்று அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது திடீரென லாரி மோதியது.
இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் ஆறுமுகம் காயம் அடைந்தார். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். விபத்தில் சிக்கிய லாரியை ராட்சத கிரேன் மூலம் மீட்டனர்.
இந்த விபத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள கோஆப்டெக்ஸ் அலுவலகம் அருகே சாலையின் நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக புதிதாக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த தடுப்பு சுவர் மீது எந்த ஒரு பிரதிபலிப்பானும் பொருத்தப்படவில்லை. இதனால் இந்த தடுப்பு சுவரால் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரு லாரியும் தடுப்புசுவர் மீது மோதியது.
இந்த விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் மீது பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும். கடலூர்- சிதம்பரம் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்பு கட்டை இருப்பதை அறிவுறுத்தவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.