செய்திகள்

வாகன சோதனையில் இன்ஸ்பெக்டருடன் தகராறு- தொழில் அதிபர் கைது

Published On 2018-08-30 16:04 GMT   |   Update On 2018-08-30 16:04 GMT
தக்கலையில் வாகன சோதனையில் இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்த தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
தக்கலை:

தக்கலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் தக்கலை பழைய பஸ் நிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த கார், இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து போக்குவரத்து விதிமுறைகளை கடை பிடிக்கிறார்களா? என்று சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த கிங்சிலிராஜ்(வயது34) என்ற தொழில் அதிபர் இருந்தார். அவர் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டி வந்ததால் அவரிடம் இன்ஸ்பெக்டர் நடராஜன் அது பற்றி கேட்டார். மேலும் ஆவணங்களையும் அவர் சோதனை செய்தார்.

இதனால் இன்ஸ்பெக்டருக்கும், தொழில் அதிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில் அதிபரின் கார் நடு வழியில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி இன்ஸ்பெக்டர் நடராஜன் தக்கலை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தான் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கிங்சிலிராஜ் தன்னை அவதூறாக பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்துகொலை மிரட்டல் விடுத்ததாக கூறி இருந்தார்.

இந்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் கிங்சிலிராஜை கைது செய்தனர். மேலும் அவர் பயணம் செய்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம்பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News