செய்திகள்

ஆற்காடு அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பைக் பறிப்பு

Published On 2018-08-30 11:42 GMT   |   Update On 2018-08-30 11:42 GMT
ஆற்காடு அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பைக் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆற்காடு:

ஆற்காடு அருகே உள்ள அரும்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கந்தன் மகன் மூர்த்தி (வயது28) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாம்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கலவை அருகே மூர்த்தி சென்று கொண்டிருந்த போது வழியில் வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்பது போல் பைக்கை நிறுத்தி உள்ளார். மூர்த்தி பைக்கை நிறுத்தியவுடன் அந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பைக்கை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

இது குறித்து மூர்த்தி கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று கலவை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசார்அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில் அவர் செய்யாறு அடுத்த மோரணம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (28). என்பது தெரியவந்தது. மேலும் மூர்த்தியிடம் பைக்கை பறித்து சென்றதையும் ஓப்புக் கொண்டார். அவர் வேறு ஏதேனும் வழக்குகளில் சம்பந்தபட்டுள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News