செய்திகள்

திருக்கோஷ்டியூரில் வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-08-29 15:21 GMT   |   Update On 2018-08-29 15:21 GMT
திருக்கோஷ்டியூரில் அலுவலக நேரத்தை நீட்டிக்க கோரி வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்:

திருக்கோஷ்டியூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் இந்த வங்கி மட்டுமே இருப்பதால் திருக்கோஷ்டியூர் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு கணக்கு வைத்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த வங்கியினை மாற்ற முயற்சித்தபோது மக்கள் போராட்டத்தின் மூலம் மாற்றம் கைவிடப்பட்டது.

 தற்போது வங்கி கிளையில் அலுவலக நேரம் குறைக்கப்பட்டு, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் என்று துண்டு பிரசுரம் மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனை செய்யமுடியாமல் அவதியடைந்தனர். மேலும் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் 200–க்கும் மேற்பட்டோர், வழக்கம் போல் அலுவலக நேரத்தை நீட்டிக்க கோரி வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வங்கி அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News