கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு ஒத்திகை
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அணுசக்தி மையத்தில் ஆண்டுக்கு ஒருமுறை கதிரியக்க மாசு கட்டுப்பாட்டு திட்டத்தின் படி 3அடுக்கு அவசரநிலை பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று மாலை ஊழியர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் அவசர நிலை நிர்வாகக்குழுவின் தலைவரும் நிலைய இயக்குனருமான சத்திய நாராயணன் தலைமையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
அணுமின் நிலையத்தினுள் அணுக்கசிவு ஏற்பட்டு கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளதாக அவசர ஒலி எழுப்பப்பட்டது. இதனால் ஊழியர்கள் பதட்டம் அடைந்தனர். அவர்களை கட்டிடத்தின் உள்ளே இருக்கும் படியும் அனைத்து ஜன்னல்களையும் மூடவும் அறிவுறுத்தப்பட்டது.
காயமடைந்த ஊழியர்களை ஆம்புலன்சில் ஏற்றுவது போன்றும் அனைவருக்கும் அயோடின் மாத்திரை கெடுப்பது போன்றும் நடித்து காண்பிக்கப்பட்டது.பின்னர் அனைவரையும் அவசர வழிகளில் அனுப்பினர்.
பதட்டம் அடைந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேறினர். அவர்கள் வெளியில் வந்த பின்னர் தான் இது ஒத்திகை என்பது தெரிந்தது. பின்னர் கதிரியக்கத்தால் மாசுபட்ட வாகனங்களை ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். இந்த ஒத்திகை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.