செய்திகள்

13 மாதங்களுக்கு பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைத்த சம்பள உயர்வு

Published On 2018-08-28 09:44 GMT   |   Update On 2018-08-28 09:59 GMT
13 மாதங்களுக்கு பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் நிலுவையிலிருந்த ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் சம்பளம் கிடைத்ததுள்ளது. #DMK

சென்னை:

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்ற ஆண்டு மாத சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தி 1 லட்சத்து 5 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டது.

இதை பல கட்சிகள் விமர்சித்தன.

சம்பளம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தினர்.

இதை காரணம் காட்டி, தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு புதிய சம்பளம் வேண்டாம் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதை அடுத்து கடந்த 13 மாதங்களாக பழைய சம்பளமான 55 ஆயிரம் ரூபாயை மட்டுமே தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வாங்கி வந்தனர்.

அதே நேரத்தில் புதிய சம்பளத்தை வாங்க அனுமதிக்கும் படி ஸ்டாலினிடம் துரைமுருகன் மூலம் எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தி வந்தனர்.

இதையடுத்து எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் புதிய சம்பளத்தை வழங்கும் படி சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் ஒன்றை அளித்தார்.

தி.மு.க தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்களே சம்பளம் வாங்குகிறோம். நீங்களும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டதால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் புதிய சம்பளம் வாங்க முடிவெடுத்துள்ளோம் என்று கடிதத்தில் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படை யில் தி.மு.க எம்.எல்.ஏ.க் களுக்கு புதிய சம்பளம் வழங்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டார்.

இதையடுத்து தி.மு.க எம்.எல்.ஏ க்கள் 89 பேருக்கும் 1.7 2017 முதல் கணக்கிட்டு 13 மாத நிலுவைத் தொகை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதி மரணமடைந்த நாள் வரை (ஆகஸ்ட் 7-2018) கணக்கிட்டு அவருடைய வங்கிக் கணக்கிலும் 6 லட்சம் ரூபாயை தமிழக அரசு செலுத்தியுள்ளது.

Tags:    

Similar News