கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் மீது கல்வீசியதில் பயணி மண்டை உடைந்தது
ஆலந்தூர்:
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நேற்றிரவு மின்சார ரெயில் ஒன்று சென்றது. பரங்கிமலை நிலையம் நெருங்கும் முன்பாக கிண்டி மடுவங்கரை மேம்பாலத்தில் ரெயில் சென்ற போது திடீரென கல் பறந்து வந்தது. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த பயணி சாம்சுந்தர் மீது கல் விழுந்தது.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பரங்கிமலை நிலையத்தில் இறங்கிய அவர் ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்தார். ரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்ட அவரை உடனே ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குரோம்பேட்டையை சேர்ந்த அவர் பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி போலீசாரிடம் விளக்கி கூறினார்.
இதைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் இரவு கல் வீசப்பட்ட பகுதிக்கு சென்றனர். அப்போது போலீசார் மீதும் கற்களை வீசிவிட்டு ஓடிவிட்டனர். கிண்டி ரெயில் நிலையம் பகுதியில் உள்ள சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கருதி போலீசார் அவர்களை ‘பொறி’ வைத்து தேடி வருகிறார்கள்.