செய்திகள்

ஓடும் ரெயிலில் நகை திருடிய வாலிபர் கைது- 2 மாதத்திற்கு பிறகு பிடிபட்டார்

Published On 2018-08-27 16:46 IST   |   Update On 2018-08-27 16:46:00 IST
ஜோலார்பேட்டையில் ஓடும் ரெயிலில் நகை திருடிய வாலிபரை 2 மாதத்திற்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜோலார்பேட்டை:

வேலூர்அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் கோகிலம் (வயது 22). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது தான் வைத்திருந்த 2 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து அவர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றிதிரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில்கூறினார். அதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த தேவராஜ் (22) என்பதும், கோகிலத்திடம் நகையை திருடியதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News