செய்திகள்

கிளியனூரில் மணல் கடத்திய லாரி உரிமையாளர் கைது- டிரைவர் தப்பிஓட்டம்

Published On 2018-08-27 09:35 GMT   |   Update On 2018-08-27 09:35 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிளியனூரில் மணல் கடத்திய லாரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்கும் பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் துணைபோலீஸ் சூப்பிரண்டு வீமராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் திண்டிவனம் அருகே உள்ள கிளியனூர் வழியாக மணல் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் கிளியனூர் அருகே உள்ள காட்ராம்பாக்கம் என்ற இடத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வேகமாக வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. போலீசார் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினார். போலீசாரை கண்டதும் லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடிவிட்டார்.

மோட்டார்சைக்கிளில் வந்தவர் நிற்காமல் சென்றுவிட்டார். உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மோட்டார் சைக்கிளில் சென்றவரை வாகனங்களில் பின்தொடர்ந்து சென்று போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுவை மணலிப்பட்டு பகுதியை சேர்ந்த மூர்த்தி(வயது 31) என்பதும் இவர் மணல் கடத்தி வந்த லாரியின் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்து கிளியனூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பிஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News