செய்திகள்

கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம்

Published On 2018-08-25 22:06 IST   |   Update On 2018-08-25 22:06:00 IST
கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அரியலூர்:

மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணப்படிகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் அர்ச்சுனன் தலைமையில் டாக்டர்கள் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது அரசு டாக்டர்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் டாக்டர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து, அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அரியலூர் மாவட்ட அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் கொளஞ்சிநாதன் தலைமையில் டாக்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். இதில் தலைமை டாக்டர்கள் ரமேஷ் கண்ணன், உமா, மறைதென்றல், விக்னேஷ், மேகநாதன் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களும் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் டாக்டர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
Tags:    

Similar News