திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்ய வேண்டும்-செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
திருவாரூர்:
திருவாரூர் நகர அலுவலகத்தில் கலைஞருக்கு அஞ்சலி கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உருவப் படத்திற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கருணாநிதி கட்டி காத்த தி.மு.க.வை வழிநடத்த தகுதி பெற்றவர் மு.க.ஸ்டாலின். எனவே அவரை தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு 13 முறையும் வெற்றி பெற்று தோல்வியே காணாது 5 முறை முதல்வராக பதவி வகித்த மறைந்த கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள். டி.ஆர்.பி.ராஜா, ஆடலரசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பாலு, தியாகபாரி, நகர, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #mkstalin