செய்திகள்
குளத்தில் மூழ்கி பலியான அண்ணன் தம்பி வசந்தகுமார்-அபிமன்யன்.

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி அண்ணன் - தம்பி பலி

Published On 2018-08-20 07:19 GMT   |   Update On 2018-08-20 07:19 GMT
தஞ்சை அருகே அண்ணன், தம்பி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த சாலியமங்கலம் அருகே உள்ள ஆர்சுத்திபட்டு கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். விவசாயி. இவருக்கு வசந்தகுமார் (வயது 11), அபிமன்யன் (9) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

வசந்தகுமார் தஞ்சையில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பும், அபிமன்யன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக வசந்தகுமாரும், அபிமன்யனும் அந்த பகுதியில் உள்ள நரசிம்மர் கோவில் குளத்தில் குளிக்க இன்று காலை புறப்பட்டு சென்றனர்.

பின்னர் இருவரும் நரசிம்மர் கோவில் குளத்தின் கரையில் குளித்து கொண்டிருந்தனர்.

குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக திடீரென அவர்கள் இருவரும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அப்போது அவர்கள் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கரையில் நின்ற பொதுமக்கள் குளத்தில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் இருவரையும் காணவில்லை.

பின்னர் இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் வசந்தகுமார் மற்றும் அபிமன்யன் ஆகியோரை மீட்டனர்.

பின்னர் குளத்தில் மூழ்கி பலியான அண்ணன்- தம்பி உடல்களை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவர்கள் 2 பேர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News