அரக்கோணம் பகுதிகளில் சாராயம் கடத்தியதாக 4 பேர் கைது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த சித்தேரி வழியாக வேனில் சாராயம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அரக்கோணம் மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி போலீசாருடன் சென்று அந்த பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது அதில் 3 கேன்களில் சாராயம் இருந்தது. சுமார் 110 லிட்டர் சாராயத்தையும், வேனையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஐப்பேடுவை சேர்ந்த முரளி (37) என்பவரை கைது செய்தனர்.
இதைப்போன்று அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பழனிப்பேட்டை பகுதியில் ஈஸ்வரி மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்த அமுலு என்பவரும் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை நடத்திய சோதனையில் சந்திரன் என்பவர் சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றி அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.