செய்திகள்

நெய்வேலி அருகே முந்திரி தோப்பில் நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம்- போலீசார் விசாரணை

Published On 2018-08-17 16:02 IST   |   Update On 2018-08-17 16:02:00 IST
நெய்வேலி அருகே முந்திரி தோப்பில் நிர்வாண நிலையில் கிடந்த இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த முதணை கிராமத்தில் முந்திரி தோப்பு ஒன்று உள்ளது. இன்று காலை அந்த முந்திரி தோப்பின் வழியாக பொது மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.

இதில் சந்தேகம் அடைந்த பொது மக்கள் முந்திரி தோப்புக்குள் சென்று பார்த்து போது 35 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் ஊ.மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.

அந்த பெண்ணின் முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டிருந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இறந்து கிடந்த பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த இளம் பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை அந்த பெண்ணின் முகம் சிதைக்கபட்டிருப்பதால் அடையாளம் கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பெண் மாயம் என பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பெண்ணை யாரும் கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்தனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News