கிண்டியில் கத்திமுனையில் வழிப்பறி- 8 கொள்ளையர்கள் கைது
ஆலந்தூர்:
சென்னை பரங்கிமலை பட்ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஹரிஜ்குமார். இவர் கடந்த ஜூன் மாதம் தனது தந்தையுடன் காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
கிண்டி கத்திப்பாரா பாலம் அருகே போலீஸ் இணை கமிஷனர் அலுவலகம் பகுதியில் சென்ற போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் காரை வழிமறித்தனர். பின்னர் கத்திமுனையில் மிரட்டி காரில் இருந்த 2 சூட்கேஸ்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக ஹரிஜ்குமார் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பரங்கிமலை துணை கமிஷனர் முத்துஅலி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன் பேரில் விசாரணை நடத்தி வியாசர்பாடியை சேர்ந்த ரத்னம், ஜெகதீஸ்வரன் அபினேஷ், டில்லிபாபு, பிரகாஷ், சரவணன், திருவொற்றியூர் லியோ, அண்ணாநகர் லாரன்ஸ் ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வியாசர்பாடி பகுதியில் நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு துணை கமிஷனர் முத்துசாமி ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.