திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர், ஜீவா நகரைச் சேர்ந்தவர் அழகுசாமி. இவரது மகன் முத்தீஸ்வரன் (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ள இவர் மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார்.
சில மாதங்களாக புதிய மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று முத்தீஸ்வரன் தந்தையிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த வாரம் அழகுசாமி, தனது மகனுக்கு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். சம்பவத்தன்று புதிய மோட்டார் சைக்கிளில் முத்தீஸ்வரன் வெளியே புறப்பட்டார்.
தோப்பூர் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. அப்போது கீழே விழுந்த முத்தீஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் ரத்தம் ஏதும் வரவில்லை. இதையறியாத முத்தீஸ்வரன் பின்னர் வீட்டுக்கு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர், முத்தீஸ்வரனை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தின் போது முத்தீஸ்வரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போதே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருந்தால் உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது என கூறப்படுகிறது.