செய்திகள்

சென்னிமலை அருகே வாய்க்காலில் மூழ்கி பட்டதாரி வாலிபர் பலி

Published On 2018-08-13 09:32 GMT   |   Update On 2018-08-13 09:32 GMT
சென்னிமலை அருகே வாய்க்காலில் குளிக்க சென்ற பட்டதாரி வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
சென்னிமலை:

சென்னிமலையில் உள்ள வெள்ளோடு ரோட்டில் பூங்காநகர் உள்ளது. இங்கு வசிப்பவர் நடராஜ். இவர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள காந்தி நகரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சவுந்திரராஜன் (வயது 23). இவர் பட்ட வகுப்பு முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு வீட்டில் இருந்து வந்தார்.

சவுந்திரராஜன் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த சிலருடன் சென்னிமலையில் இருந்து உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில் கணபதிபாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது அவருடன் வந்த ஒருவர் தனது மகனுக்கு நீச்சல் பழக்கிக் கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் சவுந்திரராஜன் குளிக்க வாய்க்காலில் இறங்கியுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் வாய்க்காலில் மூழ்கிவிட்டார். உடனே அவருடன் வந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவரது உடல் தண்ணீரில் மூழ்கிவிட்டதால் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாய்க்காலில் இறங்கி தேடினர். ஆனால் அவரை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை. அந்த இடத்தில் சேற்றில் சிக்கியிருந்து இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர்.

இதுகுறித்து அவரது தந்தை நடராஜ் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு வந்து அவரது உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News