செய்திகள்

கலைஞருக்கு அஞ்சலி- ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு

Published On 2018-08-08 12:14 GMT   |   Update On 2018-08-08 12:14 GMT
திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் அவரது படத்துக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
ஈரோடு:

தி.மு.க.தலைவர் முதுபெரும் தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி மறைவு தமிழக மக்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

கருணாநிதி மறைந்தார் என்ற செய்தியை தமிழர்களால் இன்னும் நம்பமுடியவில்லை.

சென்னைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே என ஈரோடு மாவட்ட மக்கள், தி.மு.க. தொண்டர்கள், தமிழ்பால் பற்றுள்ளவர்கள் தங்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊர்களிலும் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அத்தாணி, பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி, தாளவாடி, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அரச்சலூர், டி.என்.பாளையம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் கலைஞருக்கு இதய அஞ்சலி செலுத்துவதற்காக அடைக்கப்பட்டன.

பல கடைகள் முன் வியாபாரிகள் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி வைத்திருந்ததை காண முடிந்தது.

அத்தியாவசியமான பொருளான பால் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு உள்பட அனைத்து ஊர்களிலும் ரோட்டோரங்களில் வேன் மூலம் பால் விற்பனை செய்து வந்தனர்.மேலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு டீக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.

பொது மக்கள் மற்றும் தி.மு.க.தொண்டர்கள் ஆங்காங்கே கூடி நின்று கருணாநிதி பற்றியே பேசிக் கொண்டே இருந்தனர்.

ஈரோடு உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கிடந்ததால் கடை வீதிகள் மற்றும் முக்கிய இடங்கள் வெறிச்சோடி போய் கிடந்தன. ஒவ்வொருவர் வீட்டிலும் தங்கள் வீட்டில் ஒரு பெரியவர் காலமானதை போல் நினைத்து பாகுபாடின்றி தி.மு.க.தலைவர் கருணாநிதிக்கு இதய அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
Tags:    

Similar News