செய்திகள்

திண்டுக்கல் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து- கல்லூரி மாணவர் பலி

Published On 2018-08-07 10:09 GMT   |   Update On 2018-08-07 10:09 GMT
திண்டுக்கல் அருகே இன்று மினிபஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள குட்டியபட்டியில் இருந்து அனுமந்தராயன் கோட்டைக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை அந்த பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது. பஸ்சை தர்மத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் தங்கவேல் (வயது25) என்பவர் ஓட்டி வந்தார். கருப்பையா என்பவர் கண்டக்டராக இருந்தார்.

கொட்டப்பட்டி அருகே பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர்.

படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் வழியிலேயே பொன் மாந்துரை புதுப்பட்டியை சேர்ந்த இன்னாசி மகன் மார்க்ராஜா (19) என்பவர் உயிரிழந்தார். இவர் திருஇருதய கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த விபத்தில் அபிநயா (13), பிரியதர்ஷினி (17), செல்லாயி (42), தங்கத்துரை (59), மைதிலி (15), ராமசாமி (32), செல்வி (40), சவுந்தர் (20), தமிழ்ச்செல்வன் (14), பிரகாஷ் (16), சுவேதா (17), ஜெயந்தி (20) உள்பட 25 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவ-மாணவிகள் ஆவார்கள். இதனால் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு டிரைவர் தங்கவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News