செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.ம.மு.க. வெற்றி உறுதி- தங்க தமிழ்ச்செல்வன்

Published On 2018-08-07 04:08 GMT   |   Update On 2018-08-07 04:08 GMT
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.ம.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #TTVDhinakaran #ThangaTamilselvan
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தேனி மாவட்ட மக்களை விரைவில் சந்திக்க உள்ளார்.

தேனி மாவட்டத்தில் 2½ லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இன்னும் புதிய நிர்வாகிகள் சேர்க்கப்பட்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக தொகுதி பக்கமே எட்டிபார்க்காத ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஊர் ஊராக சென்று மக்களிடம் மனுக்கள் வாங்கி வருகிறார். அவர் ஏற்கனவே வாங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாரா?

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு முறைப்படி இடைத்தேர்தல் நடத்த வேண்டும். மத்திய-மாநில அரசுகள் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தினால் தான் உண்மையாகவே மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என தெரிய வரும்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதன் மூலம் அடுத்து வர உள்ள பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இது முன்னோட்டமாக அமையும்.


இரட்டை இலை மற்றும் அ.தி.மு.க. குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக நின்றே நாங்கள் வெற்றி பெற்றோம். அ.தி.மு.க. ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை கொடுத்தும் தோற்று போனது. ஆட்சி அதிகாரம் பண பலத்துடன் மோதியும் நாங்கள் மக்களை நேரடியாக சந்தித்து வெற்றி பெற்றோம். தற்போது இருக்கும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ThangaTamilselvan
Tags:    

Similar News