செய்திகள்

தவறான சிகிச்சையால் ரெயில்வே ஊழியர் பலி - உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகை

Published On 2018-08-06 10:19 GMT   |   Update On 2018-08-06 10:19 GMT
பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரெயில்வே ஊழியர் திடீரென இறந்ததால் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பார்டர் பகுதியை சேர்ந்தவர் முனிபாண்டி(வயது28). இவர் நாகர்கோவிலில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முனிபாண்டி கடந்த 31-ந்தேதி தக்கலை அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தாடையில் கல் பட்டு பற்கள் சேதமாயின. இதையடுத்து முனிபாண்டி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரது உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு முனிபாண்டிக்கு நேற்று ஆபரேசன் செய்யப்பட்டது. இந்த நிலையில் முனிபாண்டி உடல்நிலை மோசமானது. அவர் திடீரென இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் முனிபாண்டியின் உறவினர்கள் அவர் சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரியின் முன்பு கூடினர்.

ஆஸ்பத்திரி மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாலேயே முனிபாண்டி இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News