செய்திகள்

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்த மத்திய மந்திரி சுரேஷ் பிரபு

Published On 2018-08-04 06:07 GMT   |   Update On 2018-08-04 06:07 GMT
மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். #KarunanidhiHealth #KauveryHospital #SureshPrabhu
சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி (வயது 94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் நேரில் வந்து விசாரித்துவருகின்றனர்.



அவ்வகையில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தனர். அவர்களுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்றும், தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி என்றும் கருணாநிதியை பாராட்டினார்.

இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அவர் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #KarunanidhiHealth #KauveryHospital #SureshPrabhu

Tags:    

Similar News