செய்திகள்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதியோர்கள் சிகிச்சை பெற தனி வரிசை

Published On 2018-08-01 22:28 IST   |   Update On 2018-08-01 22:28:00 IST
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், முதியோர்கள் சிகிச்சை பெற தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
முருகபவனம்:

திண்டுக்கல் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக, திண்டுக்கல் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.அந்த வகையில் முதியோர்களும் கணிசமான அளவில் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

இவர்களுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, மனநலம் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்றவை முதியோர்களை அதிகம் தாக்கும் நோயாக உள்ளது. இதற்காக சிகிச்சை பெற இங்கு வரும் முதியோர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சிகிச்சை பிரிவுகளில் முதியோருக்காக தனி வரிசை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பொதுவாக முதியோர்கள் இங்கு சிகிச்சை பெற வரும் போது நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்க மருத்துவமனையின் புறநோயாளிகளுக்கான சீட்டு வாங்கும் இடம், ரத்தவங்கி, மருந்தகம், ஆண்கள், பெண்கள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் ஊசி போடும் இடம் ஆகிய இடங்களில் முதியோருக்காக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் இது நடைமுறைப்படுத்தப்படும். எனவே முதியோர்கள் இந்த சிறப்பு சலுகையை பயன் படுத்தி விரைவாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News