செய்திகள்

திருவண்ணாமலை குப்பை கிடங்கில் தீ- புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி

Published On 2018-08-01 17:21 IST   |   Update On 2018-08-01 17:21:00 IST
திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததால் எழுந்த புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினமும் 75 டன்னுக்கு மேல் இங்கு கொட்டி வருகின்றனர்.

நேற்று குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். குப்பையில் கிடந்த பிளாஸ்டிக் பைகள், டப்பாக்களில் தீ மளமளவென பிடித்தது.

இதனால் குப்பை கிடங்கில் இருந்து நச்சு புகை எழுந்தது. அந்த பகுதியே தெரியாத அளவுக்கு புகை மண்டலமாக உருவானது. ஈசானிய மைதானம் குடியிருப்பு பகுதி மணலூர் பேட்டை ரோடுவரை புகை சென்றதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இது பற்றி நகராட்சி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். குப்பை கிடங்கில் தீ வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News