செய்திகள்

குத்தாலம் அருகே பூட்டியே கிடக்கும் துணை ஆரம்ப சுகாதார நிலையம்

Published On 2018-08-01 10:09 GMT   |   Update On 2018-08-01 10:09 GMT
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. #PrimaryHealthCenter

குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 3 வருடங்களாக துணை சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் நியமிக்கப்படாததால் மருத்துவர்களை பணி அமர்த்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து வாரத்தில் 3 நாட்கள் மருத்துவர் வருவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகியும் இதுவரை மருத்துவர்கள் யாரும் பணி அமர்த்தப்படவில்லை.

இந்நிலையில் இங்கு பணியாற்றிய செவிலியரும் தற்போது வருவதில்லை. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் கடலங்குடி, திருவேள்விக்குடி, வாணாதிராஜபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.

கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போடுவதற்கும், பிரசவித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கும், மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்கும் குத்தாலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி இங்கு மருத்துவர்களை நியமித்து கடலங்குடி துணை சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News