செய்திகள்
வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயருகிறது

Published On 2018-07-31 04:21 GMT   |   Update On 2018-07-31 04:21 GMT
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 2,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. #VeeranamLake
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.

நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி பாலைவனம் போல் வறண்டு காணப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது.

அங்கிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. இதையடுத்து கீழணையில் இருந்து கடந்த 27-ந் தேதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 1,600 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. நேற்று இரவு அது 2,200 கன அடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 4 நாட்களாக வீராணம் ஏரிக்கு தொடர்ந்து அதிக அளவு தண்ணீர்வந்து கொண்டிருக்கிறது.

வீராணம் ஏரி நிரம்பி வரும் காட்சி.

நேற்று வீராணம் ஏரியின் நீர் மட்டம் 39 அடியாக இருந்தது. ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று 39.50 அடியாக ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து இதே அளவு தண்ணீர்வந்து கொண்டிருந்தால் வீராணம் ஏரி இன்னும் 4 நாட்களில் அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும். 45 அடி வரை நீர் மட்டம் வந்தவுடன் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #VeeranamLake
Tags:    

Similar News