செய்திகள்

டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுக்கு மட்டுமே மாத்திரைகள் கொடுக்கவேண்டும் - மனோகரன் வேண்டுகோள்

Published On 2018-07-30 17:21 IST   |   Update On 2018-07-30 17:21:00 IST
டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுக்கு மட்டுமே மாத்திரைகள் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Prescription #DoctorPrescription

திருச்சி:

திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கே.மனோகரன் வரவேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், சில்லரை மருந்து வணிகர்கள் வலி நிவாரணி, தூக்க மாத்திரை, மனநல மருத்துவ மாத்திரைகள், கொடின் சல்பேட் கலந்த இருமல் மருந்துகள் அனைத்தும் ஷெட்டியூல்ட் எச், எச்-1-ல் வருவதால் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுக்கு மட்டும் மருந்து கொடுக்க வேண்டும்.

அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து மருந்தாளுனர் கையெழுத்திட்டு சரியாக வைத்திருக்க வேண்டுமென கூறினார். மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ரவிக்குமார் பேசும்போது, காசநோய் மருந்து விற்பனை செய்பவர்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்த விவரங்களை அதற்கான படிவங்களில் பூர்த்தி செய்து மாதந்தோறும் மாவட்ட காசநோய் இயக்குனருக்கு அனுப்புவதுடன் அதன்நகலை சரக மருந்து ஆய்வாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும்,

மருந்து உரிமங்கள் கோரும் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையம் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்று கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன், அமைப்பு செயலாளர் கிருபானந்தமூர்த்தி மற்றும் மீனாட்சி சேகர், கே.டி.சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

கூட்டத்தில் செயலாளர் பாஸ்கரன், அண்ணாமலை, மூர்த்தி, மீனாட்சி சேகர், பெரியசாமி, சண்முகவடி வேல் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள், மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் மற்றும் ஆய்வளர்கள் கலந்து கொண்டனர். #Prescription #DoctorPrescription

Tags:    

Similar News