செய்திகள்

மதுரையில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்- பஸ் மீது கல்வீச்சு

Published On 2018-07-30 16:12 IST   |   Update On 2018-07-30 16:12:00 IST
கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது கல்லூரி பஸ் மீதும் கற்கள் வீசப்பட்டது.

மதுரை:

மதுரை விளாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு அபராதம் விதிப்பது, செல்போனில் பேச அனுமதி மறுப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும் கல்லூரியில் உள்ள தனியார் ஒப்பந்த காவலாளிகள் அடிக்கடி சோதனை என்ற பெயரில் நிறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மாணவ -மாணவிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் அவர்கள் திரண்டு நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்றனர். இந்த நேரத்தில் கல்லூரி வளாகத்தில் கல்லூரி பஸ் மீது கற்கள் வீசப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன.

இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. அதன் பின்னர் மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News