செய்திகள்

ஆலங்காயம் அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி

Published On 2018-07-30 15:50 IST   |   Update On 2018-07-30 15:50:00 IST
ஆலங்காயம் அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
வாணியம்பாடி:

ஆலங்காயம் அருகே உள்ள ராஜாபாளையம் கிராமம் மலையடிவாரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள் ஆடு, மாடுகள் அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.

அந்த ஊரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி அவருக்கு சொந்தமான ஆடுகளை விவசாய நிலத்தின் அருகே அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவில் மர்ம விலங்கு புகுந்து ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 7 ஆடுகள் குடல் சரிந்து இறந்தன. இன்று காலை ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு கிராம மக்கள் திடுக்கிட்டனர். ஆலங்காயம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இறந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

அந்த இடத்தில் செந்நாய்கள் கால் தடங்கள் இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆலங்காயம் மலைபகுதியில் செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.

செந்நாய்கள் ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்றிருக்க அதிக வாய்ப்புள்ளது. வாணியம்பாடி அருகே உள்ள செட்டியப்பனூர் துரையேறி கிராமத்தில் செந்நாய்கள் ஆடுகளை கடித்து கொன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். ஆடுகளை கொன்றது செந்நாய்களா அல்லது வேறு ஏதாவது விலங்குகளா என்பது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News