குடியாத்தம் அருகே மலை அடிவாரத்தில் வாலிபர் பிணம்: கொலையா? தீவிர விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே உள்ள ராமாலை காந்தி கனவாய் மலை அடிவாரத்தில் நேற்று மாலை அதிகளவு துர்நாற்றம் வீசியது. ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்த சிலர், துர்நாற்றம் வீசிய பகுதிக்கு சென்று பார்த்தனர்.
30 வயதுடைய ஒரு வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுப்பற்றி, அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதியிடம் தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் பரதராமி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ் பெக்டர் கவிதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர்.
வாலிபரின் உடல் அழுகி இருந்ததால், அவர் யார்? என அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் இறந்து 3 நாளாகியிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மர்ம நபர்கள் யாரேனும், வாலிபரை கொலை செய்து உடலை மலை அடிவாரத்தில் வீசிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.