செய்திகள்
கைது செய்யப்பட்ட சங்கர், கொலையுண்ட ஏழுமலை

ஆற்காடு அருகே மாமனார் அடித்துக் கொலை- மருமகன் கைது

Published On 2018-07-23 10:28 GMT   |   Update On 2018-07-23 10:28 GMT
ஆற்காடு அருகே மாமனாரை கொடூரமாக அடித்துக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு:

வேலூர் மாவட்டம் ஆற்காடு கலவை அடுத்த மேல்புதுப்பாக்கம் புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). இவர், போளூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் சங்கர் (35) என்பவருக்கு தனது மகள் மலரை திருமணம் செய்து கொடுத்தார்.

திருமணத்திற்கு பிறகு, சங்கர் மாமனார் வீட்டிலேயே தங்கிவிட்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில், சங்கர் சில நாட்களாக சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து சென்றார்.

இதற்கிடையே மாமனார், மருமகனிடையே சொத்து தகராறு ஏற்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மருமகன் மீதான ஆத்திரத்தில் மனைவி மற்றும் மகளை ஏழுமலை வீதியில் விரட்டி விரட்டி தாக்கினார்.

ஊருக்கு வந்த சங்கர், நேற்று இரவு மாமனாரிடம் மோதலில் ஈடுபட்டார். உருட்டுக்கட்டையால் மாமனார் என்றும் பார்க்காமல் கொடூரமாக தாக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டத்தில் ஏழுமலை சுருண்டு விழுந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏழுமலை மீட்கப்பட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வாழபந்தல் போலீசார், கொலை வழக்குப்பதிந்தனர். மாமனார் இறந்ததையறிந்த சங்கர் தலைமறைவானார். போலீசார் அவரை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

இன்று காலை திமிரியில் இருந்து வெளியூருக்கு தப்பி செல்வதற்காக கலவை செல்லும் சாலையில் உள்ள கனியனூர் பஸ் நிறுத்தம் அருகே பதுங்கியிருந்த சங்கரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்கனவே, மாமனார், மருமகனிடையே முன்விரோதம் இருந்ததும் தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், சங்கரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News