செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2018-07-22 23:22 IST   |   Update On 2018-07-22 23:22:00 IST
பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண் 2 மாதத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
பெருந்துறை:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஐவத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். அவருடைய மனைவி மல்லிகா. இவர்களுடைய மகன் மகேஷ்குமார் (வயது 25). மகள் நித்யா (21). பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி.

நித்யாவும், ஐவத்தம்பட்டி அருகே உள்ள நெல்லிகுடிப்பட்டியைச்சேர்ந்த தமின்அன்சாரி (24). என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள். நித்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நித்யா தன்னுடைய பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமின் அன்சாரியை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின்னர் புதுமண ஜோடி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காடபாளையத்துக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்கள். பெருந்துறையில் உள்ள ஒரு செல்போன் கடையில் தமின் அன்சாரி வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே மனைவி நித்யா பெயரை, யாஸ்மின் என்று மாற்றம் செய்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், கடந்த 19-ந் தேதி தமின்அன்சாரி வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த நித்யா அன்று பகல் 1 மணிஅளவில், திடீரென விஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடினார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் தமின்அன்சாரிக்கு தகவல் கொடுத்தார்கள். விரைந்து வந்த அவர் நித்யாவை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று முன்தினம் இரவு 10 மணிஅளவில் நித்யா இறந்துவிட்டார்.

இதுபற்றி பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நித்யாவுக்கு திருமணம் ஆகி 2 மாதங்களே ஆகியுள்ளதால் ஈரோடு ஆர்.டி.ஓவும் மேல் விசாரணை நடத்த உள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட 2 மாதத்திலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News