செய்திகள்

சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் இறந்தன

Published On 2018-07-21 11:49 GMT   |   Update On 2018-07-21 11:49 GMT
சென்னிமலை அருகே நேற்று இரவு 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்து போனது. இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

சென்னிமலை:

சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமம் பனங்காட்டு தோட்டத்தில் வசிப்பவர் ரங்கசாமி (வயது 80). விவசாயி.

இவர் 24 செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இவர் இரவு ஆடுகளை வீடு அருகே உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் பட்டி அமைத்து அதில் அடைத்து விடுவார்.

நேற்று இரவு பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டில் படுக்க சென்று விட்டார். இன்று காலை 6 மணிக்கு வந்து ஆட்டு பட்டியை பார்த்தபோது ரங்கசாமி திடுக்கிட்டார்.

அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளில் 6 ஆடுகளை ஏதோ மர்ம விலங்கு கடித்து குதறி மிக கோரமாக இறந்து கிடந்தன. மேலும் 5 ஆடுகள் மர்ம விலங்க கடித்து ரத்த காயத்துடன் கிடந்தன. அவை உயிருக்கு போராடின.

ஆடுகள் பயந்து ஓடியதில் சில ஆடுகளுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து ரங்கசாமி கதறி அழுதார். இந்த தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

கால்நடை மருத்துவர் வந்து கடிபட்ட ஆடுகளுக்கு வைத்தியம் பார்த்தார். ஆட்டு பட்டியை சுற்றி குடியிருப்பு பகுதி உள்ளதால் மற்ற மர்ம விலங்குகள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு எனவும் நாய் கடித்து ரத்தம் குடித்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் மக்கள் பேசி கொண்டனர்.

இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. ஒரு லட்சம் இருக்கும். உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

Similar News