செய்திகள்

ஈரோட்டில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2018-07-21 15:59 IST   |   Update On 2018-07-21 15:59:00 IST
ஈரோட்டில் இன்று அதிகாலை கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.

திண்டல்:

ஈரோடு திண்டல் கே. எஸ். நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி புஷ்பா (வயது 50) .

கணவன்-மனைவி இருவரும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வெளியூர் செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

செங்கோடம் பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் புஷ்பா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை (தாலிச் செயின்) திடீரென பிடித்து இழுத்து பறித்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத புஷ்பா திருடன்..திருடன்... என கத்தினார். வெங்கட்ராமன் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அதற்குள் அந்த மர்ம நபர் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார். அதிகாலை நேரம் என்பதால் உதவிக்கு யாரும் அங்கு வரவில்லை.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு வெங்கட்ராமன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

நகை பறிப்பு நடந்த இடத்தின் அருகே பல்வேறு தனியார் வணிக வளாகங்கள் உள்ளன. அங்கு பொருத்தப்பட்டுள்ள உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாநகரில் சமீப காலமாக தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News