செய்திகள்

திருமங்கலம் 4 வழிச்சாலையில் அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் சாலை மறியல்

Published On 2018-07-20 16:14 GMT   |   Update On 2018-07-20 16:14 GMT
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி திருமங்கலம் 4 வழிச்சாலையில் அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் 4 வழிச்சாலையோரத்தில் ரூ. 11.36 கோடி மதிப்பீட்டில் அரசு கலைக் கல்லூரியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இந்த கல்லூரியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீரென கல்லூரி முன்புள்ள 4 வழிச்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கல்லூரியில் குடிநீர், கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கல்லூரி சரியான நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில் கல்லூரி திறக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. கழிப்பறை இருந்தும் அதை பராமரிக்காததால் பயனற்று உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.

மேலும் கல்லூரி தாமதமாக திறக்கப்படுகிறது. பேராசிரியர்கள் தாமதமாக வருகின்றனர். இதனால் எங்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.

எனவே இதற்கு உடனே தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தினர். மறியல் குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது மறியலால் போக்குவரத்து ஒரு மணி நேரம் கடுமையாக பாதிக்கப் பட்டது.

Tags:    

Similar News