காமராஜர் மணிமண்டபம் 4 மாதத்தில் திறக்கப்படும்: நமச்சிவாயம் தகவல்
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-
சிவா:- புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் காமராஜர் மணிமண்டபம் அமைக்கும் பணி எப்போது முடிவடையும்? இதற்காக இதுவரை செலவிடப்பட்ட தொகை எவ்வளவு?
அமைச்சர் நமச்சிவாயம்:- இந்த நிதியாண்டில் பணிகள் முடிவடையும். ரூ.10 கோடியே 78 லட்சம் இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
சிவா:- நிலத்தை கையகப்படுத்திய தொகையை சேர்த்துள்ளீர்களா? நில ஆர்ஜிதம் செய்ய எவ்வளவு தொகை கொடுத்தீர்கள்? மிகப்பெரிய தொகையை கொடுத்து நிலத்தை ஆர்ஜிதம் செய்ததாக சொல்லப்படுகிறது.
காமராஜருக்கு மணிமண்டபம் அமைப்பதை வரவேற்கிறோம். தமிழகம் போன்ற மாநிலங்களில் தலைவர்கள் பெயரால் மாளிகைகள் அமைக்கின்றனர்.
ஆனால், அங்கு அரசு அலுவலகங்கள் இயங்குகிறது. வ.உ.சி .பள்ளி, பிரெஞ்சு பள்ளிக்கான கட்டிடங்கள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கி கட்டித்தர கோரினோம்.
ஆனால், அரசு செய்ய முன்வரவில்லை. 10 ஆண்டாக தொடர்ந்து பணி நடந்தும் முடிவடையவில்லை.
அன்பழகன்:- குயில் தோப்பு நிலத்தையே அரசு கையகப்படுத்தியது. இதன்பிறகு அந்த குயில் தோப்பு நிலத்தை தனியார் பிளாட் போட்டு விற்றுவிட்டனர். இதன்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நமச்சிவாயம்:- கடந்த 2006-ம் ஆண்டு காமராஜர் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பணி எடுத்த ஒப்பந்ததாரர் பணியை பாதியில் விட்டு விட்டு சென்று விட்டார்.
இதனால் 2009-ல் மீண்டும் டெண்டர் விட்டு பணிகள் நடந்தது. இதுவரை மணிமண்டபத்திற்காக ரூ.23 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நானும், சபாநாயகரும் மணிமண்டப பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளோம்.
முதல்-அமைச்சரிடம் நிதி ஒதுக்கித்தரும்படியும் கோரியுள்ளோம். 4 மாதத்திற்குள் மணிமண்டப பணிகள் முடிவடைந்து நாம் அனைவரும் சேர்ந்தே மணிமண்டபத்தை திறக்கலாம். அங்கு அரசு அலுவலகம், சென்டாக் அலுவலகம், நூலகம் ஆகியவை செயல்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.