ஆத்தூர் அருகே டிராக்டர் மோதி 2 வயது குழந்தை பலி
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது உப்பு ஓடை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். லாரி டிரைவர். இவரது மனைவி ராதிகா (வயது 27). இவர்களுக்கு தீபிகா(4) என்ற மகளும், நவீன்(2½) என்ற மகனும் உள்ளனர்.
இன்று காலை நவீன் வீட்டின் அருகே மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது டிரைவர் பிரகாஷ் என்பவர் உப்புஓடை வழியாக டிராக்டரை ஓட்டிக் கொண்டு வந்தார்.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நவீன், திடீரென பக்கத்தில் உள்ள உப்புஓடை சாலையில் நடந்து சென்றான். மகன் ரோட்டில் நடந்து செல்வதையும், எதிரே டிராக்டர் வருவதையும் பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைந்தார்.
உடனே ராதிகா, மகனை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக டிராக்டரை நிறுத்துங்கள் என சத்தம் போட்டப்படி வேகமாக சாலையில் ஓடினார்.
அதற்குள் டிராக்டர், ராதிகாவின் கண் முன்பு பயங்கரமாக நவீன் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே நவீன் பரிதாபமாக இறந்தான். மகன் தன் கண்முன் துடித்துடித்து இறந்ததை கண்டு ராதிகா கதறி அழுதார்.
சிறிது நேரத்திற்கு முன்பாக பார்த்து இருந்தால் மகனை காப்பாற்றி இருப்பேனே என கண்ணீர் மல்க கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது. டிராக்டர் மோதி 2½ வயது குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.