செய்திகள்

கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்மநபர்கள்: நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியல்

Published On 2018-07-13 16:39 GMT   |   Update On 2018-07-13 16:39 GMT
கரூரில் கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்: 

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு அண்ணாநகரில் பா.ஜ.க. சார்பில் 30 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடி பறக்கவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அந்த கொடி கம்பத்தை சாய்த்து சேதப் படுத்திவிட்டு, கட்சி கொடியை கிழித்து அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை இதனை பார்த்த பா.ஜ.க.வினர் இதுகுறித்து கரூர் நகர தலைவர் செல்வனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் செல்வன் சம்பவ இடத்திற்கு சென்று கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்டு இருந்ததை பார்த்தார்.

பின்னர் கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்வன் தலைமையில் பா.ஜ.க.வினர் அண்ணாநகர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

Similar News