செய்திகள்

ஆண்டிமடம் அருகே பூட்டிய வீட்டிற்குள் பிணமாக தொங்கிய ஐ.டி.ஐ. மாணவர்

Published On 2018-07-13 14:38 GMT   |   Update On 2018-07-13 14:38 GMT
பூட்டிய வீட்டிற்குள் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மனைவியுடன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சிவசக்தி (வயது 20). கீழப்பழூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் மாணவர் சிவசக்தி ஆய்வக உபகரணத்தை உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த கல்லூரி நிர்வாகத்தினர் அபராத தொகை செலுத்துமாறு கூறியதோடு,    மாணவரின் பெற்றோரையும் கல்லூரிக்கு வரக்கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மாணவர் சிவசக்தி சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

மேலும் அதே பகுதியில் வசித்து வரும் உறவினர்களிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக மாணவர் சிவசக்தியை காணவில்லை. அவர் பெற்றோரை காண திருப்பூர் சென்றிருக்கலாம் என நினைத்து அருகில் இருந்தவர்கள் நினைத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று மாணவர் வசித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த ஆண்டிமடம் போலீசார் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது மாணவர் சிவசக்தி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார் மாணவரின் சாவுக்கு காரணம் என்ன என்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News