செய்திகள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

Published On 2018-07-08 09:16 GMT   |   Update On 2018-07-08 09:16 GMT
செங்கல்பட்டு அடுத்த சாலவாக்கத்தில் குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:

செங்கல்பட்டை அடுத்த சாலவாக்கம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இதுபற்றி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் முறையாக குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலவாக்கம் - செங்கல்பட்டு சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News