செய்திகள்

பண்ருட்டி அருகே வியாபாரி அடித்து கொலையா?- போலீசார் விசாரணை

Published On 2018-07-07 15:21 IST   |   Update On 2018-07-07 15:21:00 IST
பண்ருட்டி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 37). ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி புஷ்பா (30). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள முந்திரி தோப்பில் நேற்று முன்தினம் அண்ணாமலை தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அண்ணாமலை குடும்பத்தினருக்கு தகவல் கூறினர்.

உடனே புஷ்பா மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து, அண்ணாமலையின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை வீட்டுக்கு தூக்கி சென்றனர். அதைத் தொடர்ந்து இறுதி சடங்கு ஏற்பாடும் நடந்தது.

இந்த நிலையில் அண்ணாமலையின் தம்பி இளைய ராஜா, காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதில் எனது அண்ணன் அண்ணாமலை சாவில் மர்மம் உள்ளது. அவரை யாரேனும் அடித்து கொலை செய்து அதனை மறைப்பதற்காக சேலையில் தூக்கில் பிணமாக தொங்க விட்டு உள்ளனர்.

எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் குமரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகர் மற்றும் போலீசார் அண்ணாமலை வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த பகுதியை சேர்ந்த பலரிடமும், அண்ணாமலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் போலீசார் விசாரித்தனர்.

அண்ணாமலையை அடித்து கொலை செய்து யாரேனும் தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது வேறு ஏதும் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News