நாகையில் இன்று ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்தது: 5 பெண்கள் உள்பட 7 பேர் காயம்
கீழ்வேளூர்:
நாகையை அடுத்த நாகூர் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்தவர்கள் சிவக்குமார் மனைவி கலா (வயது 35). ஆறுமுகம் மனைவி சுமித்ரா(35). புஷ்பராஜ் மனைவி மகேஸ்வரி(30). ரத்தினவேல் மனைவி ஜெயபிரியா(35). ரமேஷ் மனைவி இன்பவள்ளி(36). இவர்கள் அனைவரும் மீன் வியாபாரிகள்.
இன்று காலை நாகையில் இருந்து லோடு ஆட்டோவில் மீன் ஏற்றிக் கொண்டு வாஞ்சூரில் விற்பதற்காக வந்துள்ளனர். லோடு ஆட்டோவை மேலவாஞ்சூர் ஆசாரி தெரு பக்கரி சாமி மகன் நாகராஜ்(36) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
நாகூர் புதிய பஸ் நிலையம் அருகில் லோடு ஆட்டோ வந்தபோது முன்னால் சைக்கிளில் சென்ற வடக்கு பால் பண்ணைச்சேரி கீழத் தெரு சிவக்குமார் மகன் இசால் (வயது17) மீது மோதாமல் இருக்க நாகராஜ் பிரேக் போட்டுள்ளார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ தலை கீழாக கவிழ்ந்தது. நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கலா உள்பட 5 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் நாகராஜ், இசால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 7 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகூர் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.