சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை குறித்து மாற்று கருத்து சொல்பவர்களையும், எதிர் கருத்து சொல்பவர்களையும் கைது செய்யும் நிலை உள்ளது. இதை விடுதலை சிறுத்தை கட்சி கடுமையாக கண்டிக்கிறது. இந்த முறையை தமிழக அரசு கைவிட வேண்டும்.
மக்கள் விருப்பம் இல்லாமல் செயல்படும் இந்த சாலை திட்டத்தை கண்டித்து வருகிற ஜூலை 17-ந் தேதி திருவண்ணாமலையிலும், 20-ந் தேதி சேலத்திலும் தோழமை கட்சிகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மாநில ஆட்சியில் தலையிடுவது மற்றும் மாவட்ட அதிகாரிகளை சந்திப்பது போன்ற விதிகளை மீறி செயல்பட்டு வரும் கவர்னருக்கு எதிராக தி.மு.க அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
அதனை தடுக்கும் விதமாக கவர்னர் மாளிகை 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
இதனை உடனடியாக கைவிட வேண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடைபெறுகிறதா? கவர்னர் ஆட்சி நடைபெறுகிறதா? என்று தெரியவில்லை. போலீசார் யார் கட்டுப்பாட்டில் உள்ளார்கள் என்பது தெரியவில்லை. இது போன்று நடக்கும் கவர்னரின் நடவடிக்கை அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி என்ற குறியீடுகள் அகற்றப்பட்டு பொ.மு, பொ.பி என்று பொது ஆண்டுகளுக்கு முன்பு பின்பு என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது.
விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட இந்த குறியீடு தொடர்பான புள்ளிவிவரங்களை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
பா.ஜ.க.வின் நான்காண்டு சாதனைகள் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்திய புள்ளி விவரத்தின்படி உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறுபான்மையினர் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு நாடு இந்தியா என்பது தான் பா.ஜ.க.வின் நான்காண்டு சாதனை.
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #chennaisalemgreenexpressway