செய்திகள்

பல்லடம் அருகே கார் மோதி அண்ணன் - தம்பி பலி

Published On 2018-06-26 14:06 GMT   |   Update On 2018-06-26 14:06 GMT
பல்லடம் அருகே வேலைக்கு சென்று திரும்பிய போது மொபட் மீது கார் மோதிய விபத்தில் அண்ணன்- தம்பி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோட்டபாளையத்தை சேர்ந்தவர்கள் ஆறுச்சாமி (43), லோகு (40). அண்ணன்- தம்பிகளான இவர்கள் பல்லடத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று இரவு 10 மணியளவில் இவர்கள் வேலை முடிந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். பல்லடம்- தாராபுரம் சாலையில் துத்தாரி பாளையம் மாதப்பூர் பிரிவில் வளைவில் திரும்பினர்.

அப்போது எதிரே திண்டுக்கல்லில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்தது. இந்த கார் திடீரென மொபட் மீது மோதியது. இதில் ஆறுச்சாமியும், லோகுவும் தூக்கி வீசப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்தனர். மொபட் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் கவிழ்ந்தது.

இதில் காரை ஓட்டி வந்த கீர்த்தனன், அதில் பயணம் செய்த சதிஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காமநாயக்கன் பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான அண்ணன்-தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவிழ்ந்த கார் மீட்கப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News