செய்திகள்

பீளமேட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கல்லூரி மாணவி பலி

Published On 2018-06-24 14:27 GMT   |   Update On 2018-06-24 14:27 GMT
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை:

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ரங்கராஜன். இவரது மகள் மைதிலி (வயது 22). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். பீளமேட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு மைதிலி, கோத்தகிரியை சேர்ந்த ஒருவருடன் பீளமேட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் மைதிலி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை ஒட்டி வந்த உக்கடத்தை சேர்ந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News