செய்திகள்

திண்டுக்கல் அருகே காதல் மனைவியை கொன்று கணவன் ஓட்டம்

Published On 2018-06-21 09:54 GMT   |   Update On 2018-06-21 09:54 GMT
திண்டுக்கல் அருகே காதல் மனைவியை தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே சிறுமலை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராமையா (வயது 23). இவருக்கும் அம்மைய நாயக்கனூரைச் சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ராமையா சரக்கு வேன் ஓட்டி வருகிறார். ரேணுகாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்டும் அவரை அழைத்துக் கொண்டு சரக்கு வேனில் ராமையா சிறுமலைக்கு வந்து கொண்டு இருந்தார்.

சிறுமலை பழையூர் பகுதியில் வேனை நிறுத்தி விட்டு காட்டு பகுதிக்குள் கணவன், மனைவி சென்றுள்ளனர்.

அப்போது ரேணுகாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். மேலும் அவரது சேலையை மரத்தில் கட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது போல் தொங்க விட்டுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புறநகர் டி.எஸ்.பி. கோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்திரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய கணவர் ராமையாவை தேடி வருகின்றனர். ராமையாவிடம் விசாரணை நடத்திய பிறகுதான் கொலைக்கான உண்மை நிலவரம் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News